அனிருத் இசையில் விஜய் பாடிய ‘நான் ரெடி’ முதல் சிங்கிள் லிரிக் வீடியோ பெரும் வரவேற்பை அள்ளியது.
இதற்கிடையே இசைவெளியீடும் இம்மாதம் 30-ம் திகதி நடக்கிறது. ரிலீஸ் வரை அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரவிருப்பதால், ‘லியோ’ வட்டாரத்தில் விசாரித்தேன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘லியோ’. இந்தப் படம் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ், சாண்டி, மேத்யூ தாமஸ் என மல்டி ஸ்டார்களோடு களமிறங்குகிறது. அனிருத் இசையில் விஜய் பாடிய ‘நான் ரெடி’ முதல் சிங்கிள் லிரிக் வீடியோ பெரும் வரவேற்பை அள்ளினாலும், பாடலின் ஒருசில வரிகள் சர்ச்சையானது. “பத்தாது பாட்டிலு நா குடிக்க, மில்லி உள்ள போனாபோதும் கில்லி வெளில வருவான்டா” போன்ற வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தவே, இப்போது அதனை நீக்கியுள்ளனர். படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சிகளின் அளவும் குறைக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது என்கிறார்கள்.
‘லியோ’வின் இசைவெளியீட்டு விழா வருகிற 30-ம் திகதி சென்னையில் நடக்கிறது. நேரு ஸ்டேடியம் உட்பட சில இடங்களைப் பார்த்துவருகிறார்கள். இன்னமும் இடம் முடிவாகவில்லை என்கிறார்கள். இதற்கிடையே இரண்டாவது சிங்கிள் லிரிக் வீடியோ வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. முன்னதாக அதுகுறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து பாடல் வெளியாகலாம். எடிட்டர் பிலோமின் ராஜின் எடிட் ஷூட்டில் இரவு பகலாக இதற்காக உழைத்துவருகிறார் லோகேஷ் கனகராஜ்.
‘நான் ரெடி’ பாடலை விஜய் பாடியிருந்தார். அதைப் போல, இப்போது வெளிவர உள்ள பாடலை அனிருத் பாடியிருக்கிறார் என்கின்றனர். மரண மாஸான பாடலாக இருக்கும் என்கிறார்கள். ‘நான் ரெடி’ பாடலை சென்னையில் செட் போட்டுப் படமாக்கினார்கள். ஆனால், இப்போது வெளிவரவிருக்கும் அனிருத் பாடலில் காஷ்மீரில் படமாக்கிய காட்சிகளும் இருக்கின்றனவாம்.
இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள், படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள் தான் என்றும், ‘நான் ரெடி’ மற்றும் இரண்டாவது சிங்கிள் இரண்டு பாடலுக்கான பர்ஃபாமென்ஸும் இசைவெளியீட்டு விழாவில் நிகழ்த்தவிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.