பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு இன்று (13) அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பை கருத்தில் கொள்ளாது பணிக்கு சமூகமளிக்காத சாரதிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் ரயில் சாரதிகள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று (12) மாத்திரம் 119 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு வெளியிட்டார்.
எவ்வாறாயினும், ரயில் சாரதிகள் சங்கம் இதுவரையில் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடவில்லை எனவும், இந்த நிலையில் இன்று சுமார் 150 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படும் அபாயம் காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை மாத்திரம் 37 குறந்துார ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.
பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் உடமைகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே பொது முகாமையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க 32 ரயில் நிலையங்களில் பொலிஸ் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே இணை முகாமையாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில் வேலை நிறுத்தம் தொடருமா? இல்லை? என்பது தொடர்பில் இன்று பிற்பகல் செயற்குழு கூடி முடிவெடுக்கும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சேவையை அத்தியவசிய சேவையாக்கிய பின்னர், பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களின் வேலை மாத்திரமன்றி அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி திரு.யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.