ஹோமாகம கைத்தொழில் பேட்டையில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் தீப்பிடித்த களஞ்சியசாலை ஒன்றுக்கு தேவையான சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், அப்பகுதியின் வளிமண்டலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணியுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
தீயில் இரசாயனம் கலந்ததால், தொழிற்சாலையை சுற்றியுள்ள மின் கம்பிகள் மற்றும் சுவர்களில் இரசாயன கழிவுகள் படர்ந்திருப்பதையும், மின்சாரசபை ஊழியர்கள் கம்பிகளில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.
தீ பரவலுக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயை கட்டுப்படுத்த ஹொரணை நகரசபை, தெஹிவளை மற்றும் கோட்டே மாநகரசபையின் சுமார் பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
தீயினால் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட நஷ்டம் இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும், தீ விபத்துக்குள்ளான தொழிற்சாலையைச் சுற்றியுள்ள நான்கு தொழிற்சாலைகளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.