நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-03 இன் பிரக்யான் என்ற ரோவர் பகுதி தற்போது ஆய்வு பணிகளை முன்னெடுத்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான்-03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்தநிலையில், அதில் இருந்து பிர்க்ரோவர் பகுதி பிரிந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
எதிர்வரும் 14 நாட்கள் நிலவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ரோவர் ஆய்வு செய்யவுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் விண்கலமாக சந்திரயான் 3 உள்ளதால், அதன் ஆய்வுகள் குறித்து உலக நாடுகள் மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றன.
எதிர்வரும் நாட்களில் பல புதிய தகவல்களை சந்திரயான் 03 பூமிக்கு அனுப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன், அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும்.
பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும்.
ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கின்றது. அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகலாக இருக்கும்.
அடுத்த 14 நாட்கள் இரவாக நீடிக்கும்.
அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பெற்றுக் கொண்டு, லேண்டர் கருவி செயல்படும் என்பதுடன், ரோவரும் இயங்கும்.
அனைத்து ஆய்வுகளையும், நிலவில் பகல் பொழுதான 14 நாட்களுக்குள் நிறைவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும் என்பதால், லேண்டர் கருவிக்கு சூரிய ஒளி கிடைக்காது என்பதுடன், அதனால், அது செயல் இழக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், நிலவின் தென்துருவத்திற்கு அடுத்ததாக அனுப்பப்படும் சந்திரயான்-4 திட்டம், மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் அனுப்பப்படும்.
அதில், அனுப்பப்படும் கருவி மூலம் நிலவின் தரைப் பகுதியில் உள்ள கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதனை ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




