காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே நாளை மறுதினம் (10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி(Cheriyapani) கப்பல், இன்றும் நாளையும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடவுள்ளது. 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சேவைக்காக தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் நேற்று(07) நாகை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கப்பலுக்கு சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.
நாகை – இலங்கை கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.