சென்னை: இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலை கொண்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அது, இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து 12ம் திகதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை- தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இந்த நிகழ்வின் காரணமாக இன்று முதல் 10ம் திகதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 11ம் திகதி கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 12ம் திகதியில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.




