தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலாநிதி பட்டத்தைப் பயன்படுத்தவில்லை எனவும், சில தரப்பினர் தனக்கும் தனது கட்சிக்கும் சேறு பூசும் வகையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி இதுவாகுமெனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் தரவுகளை உள்ளீடு செய்யும் போது தவறுதலாகக் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் ஜயலத் பெரேரா அறிக்கை ஒன்றினூடாக முன்னதாக தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் நாடாளுமன்ற இணையதளத்திலிருந்து ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என எழுத்தப்பட்டடிருந்த பட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடளித்துள்ளார்.




