மயிலத்தமடு நிலப்பரப்பினை மேய்ச்சல் தரையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் மூலம் மிக நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் வாய்மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அத்துடன், மேய்ச்சல் தரை விடயம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விடயங்களைப் பின்பற்றப் போகின்றதா? அல்லது புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றதா? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் கேள்விக்குப் பதிலளித்த காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க,
குறித்த காணியை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு முன்னதாக, வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தற்காலிகமாகக் காணி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் 6,000 ஏக்கர் வரையான மேய்ச்சல் தரை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குறித்த காணி வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் சட்ட ஏற்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் மேய்ச்சல் தரையாக வர்த்தமானியில் அறிவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் புதிதாக ஆரம்பிப்பதற்கு ஒன்றுமில்லை. அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.




