நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்று, வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று பலத்த காயங்களுக்கு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களை உபயோகித்து வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர சேனவிரத்ன சம்பவ இடத்திற்கு வருகைதந்த நிலையில், அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக வைத்தியசாலை நிர்வாகம் நுவரெலியா காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளது.
இதனையடுத்து குறித்த முன்னாள் இராணுவ அதிகாரி நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர சேனவிரத்னவிடம் வினவியபோது.
“நுவரெலியாவில் ஏதோ ஒரு இடத்தில் தங்கி இருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு வருகை தந்த குறித்த நபர் ,ஆரம்ப பிரிவில் அனுமதிக்கும் போது கனிஷ்ட ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வைத்திய சேவைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்றபோது அவர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் கூறினார்.”
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி, காவல்துறையினரின் பாதுகாப்புடன் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.




