புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை , சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் மற்றும் இரண்டு கைதிகள் இணைந்து கொடூரமாக தாக்கியதால், அவர் உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி பொரள்ளை காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
அதன்படி குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொரள்ளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் மஹரகம பகுதியை சேர்ந்த 54 வயதுடைய எஸ்.டி. நிஷாந்த என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து , குறித்த நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின் புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதன்படி , கடந்த 26 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் இருவரால் தனது கணவர் தாக்கப்பட்டதாக சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கூறியதாக அவரது மனைவி காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட குறித்த நபர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரை அவரது மனைவி பார்க்க சென்ற போது அவர் பேச முடியாத நிலையில் இருந்ததாகவும், கடந்த 16 ஆம் திகதி அவர் இறந்த விட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்ததாகவும் அவர் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறைச்சாலை அதிகாரிகள் தனது கணவரை தாக்கியதாகவும், போதைப்பொருளை விழுங்கி விட்டதாக கூறி உப்பு கலந்த தண்ணீரை அவருக்கு குடிக்க கொடுத்ததாகவும் அவரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தாக காவல்துறையிர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக குற்றபுலனாய்வு திணைக்களத்தினரால் களப்பரிசோதனை மேற்கொண்டதை தொடர்ந்து , காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




