அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களான ஜனவசம, பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்டவற்றின் தொழிலாளர்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வேலுகுமார் மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் தொழில் ஆணையாளரை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், “மேற்குறிப்பிட்ட நிறுவனங்களினால் ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவை வழங்கப்படாமையினாலும் முறையற்ற ரீதியில் காணிகளை பகிர்ந்தளிப்பதினாலும் பெருந்தோட்ட மக்கள் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் நிதி முறையான புள்ளி விபரங்கள் இல்லாமையினால் மத்திய வங்கியில் தேங்கியுள்ளது.
உரியவர்களை அடையாளம் கண்டு உடனடியாக அவற்றினை சீர் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாம் இதன்போது வலியுறுத்தி இருந்தோம்.
காணிகளை பகிர்ந்தளிக்கின்ற போது தொழில் புரியும் தொழிலாளர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அதனைத் தவிர்த்து வெளியாட்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் தீர்மானம் எடுக்க உள்ளோம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.