கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. நேற்று, ஐஸ்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் அவர் விளையாடினார்.
இது அவர் விளையாடிய 200-வது சர்வதேச போட்டி. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது.
சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் கடந்த மார்ச் மாதம் படைத்திருந்தார். அப்போது குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் தாகர்த்தார்.
அல்-முதாவா, மொத்தம் 196 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். யூரோ கோப்பை தகுதிச் சுற்றில் லீக்கின்ஸ்டைன் அணிக்கு எதிராக தனது 197-வது சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் ரொனால்டோ விளையாடி அதை முடியடித்தார்.
38 வயதான ரொனால்டோ கடந்த 2003-ல் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட தொடங்கினார். சர்வதேச போட்டிகளில் மொத்தம் 123 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலிலும் அவர்தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிராக கோல் பதிவு செய்து ரொனால்டோ அசத்தினார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மிகவும் லேட்டாக பதிவு செய்யப்பட்ட கோல் அது. ஆனாலும், அணியின் வெற்றியை அதுவே உறுதி செய்தது. ஏனெனில் இந்தப் போட்டியில் போர்ச்சுகல் 1-0 என வெற்றி பெற்றது.
Cristiano Ronaldo is the first player to make 200 appearances in men's international football 🐐 pic.twitter.com/kGO6wn3XwT
— GOAL (@goal) June 20, 2023




