9-வது மகளிர் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கியது.
இதன் இறுதிப் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.இந் நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலியா – ஸ்வீடன் அணிகள் மோதின. 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார்.
அவுஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 2-வது பாதி தொடங்கியது.
62-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார்.
இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது. கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் அவுஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர்.
இதன்மூலம் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஸ்வீடன் அணி 4-வது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.